சென்னை: எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றி மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி, அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் “சமப்படுத்துதல்” என்பதாகும். இந்தக் கருப்பொருளைச் சிறப்பாக செயல்படுத்திட, குறிப்பாக, எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமப்படுத்தும் பாங்கினையும், எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலைக் குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை மாநில அரசும், அரசு சாராத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்தியதால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.24 விழுக்காட்டைவிடக் குறைவானதாகும். எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, புதிய எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 2,090 நம்பிக்கை மையங்களின் மூலம், எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்துக் கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் வாயிலாகக் கண்காணிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்திட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 2009-ஆம் ஆண்டு ஐந்து கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு இத்திட்டங்களுக்காக இதுவரை 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிதியிலிருந்து பெறப்படும் வட்டித்தொகையின் மூலமாக ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏறத்தாழ 3,200 குழந்தைகள் பயன் பெற்றுள்ளார்கள். இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடி திட்டமாகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றை மேலும் குறைத்திடத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இச்சமூகத்தில் எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றித் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எச்.ஐ.வி உள்ளோரை அன்பால் அரவணைத்திடுவோம்! ஆதரவு காட்டிடுவோம்!”.

இவ்வாறு  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.