மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச் சொந்தமாக மாம்பழத்தோட்டத்தில் வசித்து வருகிறார்.  அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவர் தோட்டத்திற்கு மாம்பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அர்ஜுன், மாம்பழம் பறித்ததற்காகச் சிறுமியை மிரட்டியுள்ளார்.  தொடர்ந்து கோபம் தீராமல் சிறுமி என்றும் பாராமல் அவரைக் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பின்னர் சிறுமி வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  அத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர்.  அப்போது தான் அச்சிறுமி கடைசியாக மாம்பழம் பறிக்கச் சென்றதை அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.  உடனே கிராம மக்களுடன் அங்குச் சென்று தேடியபோது, தோட்டத்தின் அருகேயுள்ள ஒரு முட்புதரில் அச்சிறுமி கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பழத்தோட்ட உரிமையாளர் அர்ஜுனைத் தேடிச் சென்றனர்.  அவர்கள் கூட்டமாக வருவதை அறிந்த அர்ஜுன் தப்பியோடி விட்டார்.  ஆனாலும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் அர்ஜூன் வீட்டில் இருந்த அவரது மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.  மேலும் தோட்டத்திலிருந்த மரங்களை வெட்டி சாய்த்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ஜுனைத் தேடி வருகிறார்கள்.  கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

– லெட்சுமி பிரியா