நாளை மறுதினம் திருமணம்..  தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை..

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 19 வயது அஞ்சாலுக்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது.  இரவு நேரம் திருமண சடங்குகள் நடைபெற்று வந்துள்ளது.  உறவினர்கள் அனைவரும் திருமண குதூகலத்துடன் இருந்த நிலையில், திடீரென சிலர் மணப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

வந்தவர்கள் அஞ்சாலை ஒருதலையாகக் காதலித்த சாகர் என்பவரும் அவரது கூட்டாளிகளும் தான்.  உள்ளே நுழைந்த இவர்கள் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே பலியானார்.  பலர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் அவர்களில் அஞ்சாலின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  மணப்பெண் அஞ்சாலின் சகோதரருக்கும் காயம் பட்டுள்ளது.

இந்த சாகர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி அஞ்சாலின் பின்னாலேயே திரிந்துள்ளார்.  ஆனால் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டார் அஞ்சால்.  அத்துடன் அஞ்சாலுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவது சாகருக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளறியுள்ளது.  இதனால் அஞ்சலைப் பழி வாங்கத் திட்டமிட்டார் இவர்.  எனவே தனது நண்பர்களுடன் திருமண வீட்டிற்குள் புகுந்து இக்கொடுமையைச் செய்துள்ளார்.

இது குறித்து அஞ்சாலின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இக்கொலைகள் தொடர்பாக சாகரின் இரண்டு நண்பர்களைக் கைது செய்துள்ளனர்.  முக்கிய குற்றவாளியான சாகர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா