மதுரை:

மிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா பகுதியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய அனுமதி எதிர்த்து மக்கள் சில ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிறுவனங்கள் எடுக்கும் ஆயில்கள் அனைத்தும் குழாய்மூலம் ஒரு இடத்துக்கு எடுத்துச்எசெல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு  மாற்று இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்து வருகிறது.

‘இதற்காக ராட்ச குழாய்கள் பதிக்கும் பணி விவசாய நிலங்களின் இடையே நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கெயில், காவல்துறை உதவியுடன் தங்களது பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் , விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்ககல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராமநாதபுரம் – தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற கிளை, விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து பெட்ரோலியத்துறை செயலர், சுற்றுச்சூழல் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.