சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியில் சேருவதற்கு, கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மாதம் ரூ. 15 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 5 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும், இரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 5 ஆயிரம் கேங்மேன் பதவிகளை 10 ஆயிரமாக உயர்த்தி மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.  கேங்மேன் பதவிக்கு ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு 2019ம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை 40 இடங்களில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  இத்தேர்வில் தகுதிப் பெற்ற 23 ஆயிரம் பேருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 15 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். அவர்களின் பட்டியல் மின்சார வாரியத்தில் கடந்த ஆண்டு (2021) ஏப்ரலில் வெளியிடப்பட்டது. ஆனால், பல்வேறு வழக்குகளின் காரணமாக அவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் நிலுவையில் இருந்தன.

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதுடன் உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும் எனன கூறப்பட்டது. பின்னர்,  கேங்மேன் பணி நியமனம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்தத் தடை நீக்கப்பட்டு 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் சட்டமன்ற தேர்தல் பணி காரணமாக, பணியிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5,493 பேரின் பிரச்னைகளை களைய வாரிய செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.