சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள அரசின் தடையை எதிர்த்து,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்,  குறைந்தபட்சம் ஐந்து பேராவது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதை ஏற்படுத்த நீதிபதிகள், தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன்,  மத வழிபாடுகளை விட உயிர்  முக்கியமானது, பொதுநலன் கருதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுபிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.