ஜெய்ப்பூர்

நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலாகிறது

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் கோரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை என ஐயப்படும் தற்போதைய கால கட்டத்தில் இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி உள்ளது.  இதுவரை 1.40 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு தற்போது சுமார் 14.66 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இங்கு நேற்று வரை 3,81,292 பேர் பாதிக்கப்பட்டு 3,008 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்றுவரை 3,33,379 பேர் குணம் அடைந்து 44,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராஜஸ்தான் மாநில அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.  அவ்வகையில் நாளை முதல் ஏப்ரல் 30 வரை 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  இந்த இரவு நேர ஊரடங்கு தினசரி மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிக்கு முடிவடைகிறது.