ரியோ டி ஜெனிரோ

இன்று முதல் பிரேசில் நாடு ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது.

 

கடந்த செப்டம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவரான இந்தியா, ‘வாசுதெய்வ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தியது.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஜி-20 மாநாடு சிறப்பாக நடைபெற்ற பின்னர், அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வாவிடம் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

இன்று முதல் அதிகாரம் மிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை இன்று (டிசம்பர் 1-ந்தேதி) முதல் பிரேசில் நாடு வகிக்கிறது. அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.