லண்டன்:

லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதனையடுத்து, இங்கிலாந்தின் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.


பஞ்சாப் நேஷன் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், லண்டனுக்கு தப்பியோடினார் நீரவ் மோடி.

சில தினங்களுக்கு முன்பு லண்டன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை தனியார் தொலைக் காட்சி செய்தியாளர் அடையாளம் கண்டு பேட்டி எடுக்க முயன்றார்.

ஆனால் பதில் ஏதும் தராமல் நீரவ் சோடி அங்கிருந்து நழுவினார். இதனையடுத்து நீரவ் மோடியை ஸ்கார்ட்லாந்து போலீஸார் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர்.

லண்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இங்கிலாந்தின் பெரிய சிறையான ஹெர் மெஜெஸ்டிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஓராண்டாக மேற்கு லண்டனின் மையப்பகுதியில் உள்ள சொகு பங்களாவில் ஆடம்பரமாக வசித்து வந்த நீரவ் மோடி, கைதிகள் எண்ணிக்கை அதிகமுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தனி செல் தரப்பட்டுள்ளதா? அல்லது மற்ற கைதிகளுடன் சேர்த்து அடைக்கப்படுவாரா? என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை.

இதற்கிடையே, நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர அமலாக்கப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.