டில்லி:

டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) மேற்கொள்ளப்படும் புதிய தணிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இச்சங்க தலைவராக இருந்த காலத்தில் நடந்த அவலமான ஒப்பந்தங்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்துள்ளது 2012&13, 2013&14, 2014&15ம் ஆம் நிதியாண்டுகளின் வரவு செலவை டில்லி உயர்நீதிமன்றம் நியமித்த நிர்வாகி மூலம் புதிதாக தணிக்கை செய்யப்படவுள்ளது. இதில் பல முறைகேடுகள் அம்பலமாகும் என அவுட்லுக் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டால் அருண்ஜெட்லியால் கிரிமினல் மற்றும் சிவில் அவதூறு வழக்குகளுக்கு ஆளாகியுள்ள ஆம்ஆத்மி தலைவர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் விதமாக அமையும். டிடிசிஏ ஊழல் குறித்து 2015ம் ஆண்டு ஜன்தா கா ரிப்போர்ட்டரில் தான் முதலில் செய்தி வெளியானது.
இதன் பிறகு தான் பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கிர்த்தி ஆசாத் பத்திரி க்கையாளர்களை சந்திதது உதவி பொது மேலாளரின் வீடியோவை வெளியிட்டார். இதில் போலி ஆவணங்கள் தயார் செய்த குற்றச்சாட்டு அருண்ஜெட்லி மீது சுமத்தப்பட்டது.

டிடிசிஏ கணக்கில் இருந்து முறையான அனுமதியின்றி கோடி கணக்கான ரூபாயை அதன் அதிகாரிகள் மாற்றியது தெரியவரும். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் கொள்முதல் செய்ததில் மோசடி, ரொக்க பரிமாற்றத்திற்கு ரசீது, பில் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமை, ஃபெரோஸ் ஷா விளையாட்டரங்கில் ஒரே பணிக்கு பல முறை வர்த்தகர்களுக்கு பணம் கொடுத்தது.

சான்றிதழ் இல்லாமல் பில்களுக்கு லட்சகணக்கில் பணம் கொடுத்தது, இயக்குனர்களின் மிகுந்த மற்றும் நம்பமுடியாத செலவுகள், நிதி கையாளும் விதிமுறை, ஒழுங்குமுறைகளை மீறி ஒப்பந்த பணிகளை வழங்கியது போன்ற பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் என்பவரை டிடிசிஏ நிர்வாகியாக டில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரியில் நியமித்தது. டிடிசிஏ மற்றும் தெற்கு டில்லி மாநகராட்சி இடையிலான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஸ்டேடியத்தின் உள்ளே அனுமதி இன்றி கட்டடம் கட்டப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. பல முறை விளம்பரம் வெளியிட்ட பிறகு டில்லியை சேர்ந்த எஸ்.மாத்தூர் அண்டு கோ என்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனம் இந்த சிறப்பு தணிக்கை மேற்கொள்ளும் இலக்கை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.