புதுச்சேரி:

புதுச்சேரி மாநில மக்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக  முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

ஓய்வூதியதார்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி  அரசின் சுகாதாரத்துறை சார்பில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசினார்.

அவர் கூறியதாவது, ஓய்வூதியதாரர், அவரது துணைவர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு விரிவான பங்களிப்பு மருத்துவ காப்பீடு திட்டத்தை வருகிற 2021 வரை புதுவை அரசு செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாற்று அறுவை சிகிச்சை, முக்கிய உறுப்பு அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, வால் நரம்பு உள்வைப்புகள், விபத்துகளால் ஏற்படும் பல்வேறு காயங்கள் மற்றும் முக்கிய தண்டுவட அறுவை சிகிச்சை அல்லது தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும்,  இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் அதிகபட்ச காப்பீட்டு தொகையாக  ரூ.3½ லட்சம் வரை செலவு பயனர்களுக்கு சிகிச்சை கிடைக்கும் என்று கூறினார்.

இதேபோல் புதுவை மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்த முதல்வர்,  அடுத்த கட்டமாக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.