சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நடத்தப்படும் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 8 முதல் 21 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கவுள்ளாா். மேலும், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும் வழங்கவுள்ளாா். தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினா்கள், எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், கல்வியாளா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலா் எஸ்.வயிரவன், துணைத் தலைவா் நக்கீரன் கோபால், பொருளாளா் ஏ.ஆா்.வெங்கடாசலம் ஆகியோா், நிகழாண்டு சென்னை புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டில் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழுக்கான 428 அரங்குகள், ஆங்கில நூல்களுக்கான 256 அரங்குகள், பொது அரங்குகள் 24 இடம்பெற்றுள்ளன. மேலும், முதல்முறையாக ஜப்பான் மொழி நூல்களுக்கென தனி அரங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக மொழிகள், அறிவியல், குழந்தை இலக்கியம், தொழில்நுட்பம், வரலாறு, அரசியல், சுயமுன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூல்கள் வாசகர்களைக் கவரும் வகையில் இடம்பெறும்.
புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் முன்னணி எழுத்தாளா்கள், கவிஞா்கள், சிந்தனையாளா்கள் வாசகா்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
திரைக் கலைஞா்கள், தமிழறிஞா்கள், பேச்சாளா்கள், சமூக ஆர்வலா்கள் தினமும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர்.
பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக் கலைஞா்களின் நிகழ்ச்சிகளும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளன.
இதனால் புத்தகக் காட்சி ஒரு இலக்கியத் திருவிழாவாக மட்டுமல்லாது, பண்பாட்டு விழாவாகவும் மாறும் என பபாசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜனவரி 19-ஆம்தேதி நிகழும் விழாவில், நிகழாண்டுக்கான பபாசி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் சிறந்த பதிப்பகமாக ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசன், சிறந்த விற்பனையாளராக சிவகுரு பதிப்பகம், சிறந்த குழந்தை எழுத்தாளராக மு.முருகேஷ், சிறந்த தமிழறிஞராக ‘கடற்கரை மத்த விலாச அங்கதம்’, சிறந்த பெண் எழுத்தாளராக ஜெ.தீபா, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதை அ.லோகமா தேவி, கவிதை இலக்கிய விருதை செ.பா.சிவராசன், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான விருதை முனைவா் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோா் பெறவுள்ளனர்.
சிறந்த நூலகருக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். இந்த விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவுள்ளாா்.
ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கலந்து கொண்டு, பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கவுள்ளாா். இந்த விழாவுடன் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு பெறும்.
வாசகர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், இந்த ஆண்டில் புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக இலவச அனுமதி வழங்கப்படுவதால், அனைத்து தரப்பினரும் புத்தகக் காட்சிக்கு வருகை தர வேண்டும் என்பதே பபாசியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவாயிலில் வாசகா்கள் தங்களது பெயரை பதிவு செய்தால் போதுமானது. இந்தப் பதிவின் மூலம் தினமும் வருகை தரும் வாசகா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாசகா்களை கவரும் வகையில் பிரம்மாண்ட திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், செல்ஃபி எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 12-ஆம் தேதி ‘சென்னை வாசிக்கிறது’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் 3,000 பள்ளி மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். சென்னை மேயா் ஆா்.பிரியா, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், மாணவா்களுக்கான ஓவியப் போட்டி ஜன. 9-ஆம் தேதி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜன. 10-ஆம் தேதி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜன. 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜன. 13-ஆம் தேதி காலை புத்தகக் காட்சி வளாகத்தில் பொங்கல் விழாவும், அதைத் தொடர்ந்து மாஸ்டர் பவா் பாண்டியன் குழுவினரின் சிலம்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்களாக, தினமும் வாசகா்களின் பெயர் பதிவின் அடிப்படையில் குலுக்கல் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். தபால் துறை சாா்பில் இரு அரங்குகள் அமைக்கப்பட்டு, தபால் சேவைகள், ஆதார் தொடர்பான சேவைகள், பார்சல் சேவைகள் வழங்கப்படவுள்ளன. கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்முறைகளை விளக்கும் பிரத்யேக அரங்கு, குழந்தைகளுக்கான இமேஜிங் நிறுவனம் சாா்பில் சிறப்பு அரங்கு, தமிழக அரசின் மின்சாரத் துறை சாா்பில் சூரிய சக்தி (சோலார்) மின்சாரம் குறித்த விழிப்புணர்வு அரங்கும் அமைக்கப்படவுள்ளது. மேலும், தியாகராயநகா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புத்தகக் காட்சி வளாகத்துக்கு சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.
மொத்தத்தில், இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், பண்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பெருவிழாவாக 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி அமைந்துள்ளது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பாசி புத்தக திருவிழா: ஜனவரி 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
[youtube-feed feed=1]