டில்லி
தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உதவி புரிய செயல் தலைவராக நியமிக்கப்பட 4 பேருக்கு வாய்புள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்று அவர் தலைமை பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் மிகவும் பிடிவாதமாக உள்ளார். தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமை பதவிக்கு ராகுல் காந்தியே பொருத்தமானவர் என பல மூத்த தலைவர்கள் கூறியதை அவர் ஏற்கவில்லை. அவர் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டால் அவருக்கு உதவியாக செயல் தலைவராக ஒருவரை நியமிக்க காங்கிரஸ் உத்தேசித்துள்ளது.
காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்க தற்போது 4 பேருக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சச்சின் பைலட், அசோக் கெலாத், ஜோதித்ராதித்ய சிந்தியா மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் ஆவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் செயல் தலைவர் தற்போதைய தலைவர் ராகுல் காந்தியின் தினசரி கட்சி பணிகளில் உதவுவார் என கூறப்படுகிறது.
சச்சின் பைலட் : செயல் தலைவராக வாய்ப்புள்ளவர்களில் ஒருவரான சச்சின் பைலட் 41 வயதானவர் ஆவார். அவரால் இளைய தலைமுறை மற்றும் மூத்த தலைவர்களிடம் இணைந்து செயல்படலாம் என எண்ணப்படுகிறது. அத்துடன் அவர் மறைந்த காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் பைலட் மகன் என்பது இவருக்கு கூடுதல் வாய்ப்பாகும். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
அசோக் கெலாத் : இவர் மூத்த தலைவர் அகமது படேலின் நெருங்கிய நண்பர் என்பது முக்கியமானதாகும். அகமது படேல் சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் மாநில காங்கிரஸ் தலைவராகவும் காங்கிரஸ் கட்சியின் செயலராகவும் பதவி வகித்தவர் ஆவார். கடந்த 2017 ஆம் வருடம் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை வெற்றி பெறச் செய்தவர் ஆவார்.
ஜோதிராதித்ய சிந்தியா : ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் என கூறப்படும் ஜோதிராதித்ய சிந்தியா காந்தி-நேரு குடும்பத்துக்கும் மிகவும் வேண்டியவர் ஆவார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இவர் உத்திரப்பிரதேச மேற்குபகுதியின் பொறுப்பாளராக இருந்தவர். இவர் தனது குடும்ப தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு கட்சியில் பலத்த எதிர்ப்பு உள்ள போதிலும் ராகுல் காந்தி மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆதரவு உள்ளது.
பிரியங்கா காந்தி வதேரா : இவர் காந்தி-நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவருடைய தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கவே முடியாது. இவர் இளைஞர மற்றும் கட்சியின் அனைத்து மட்ட தொண்டர்களின் அபிமானத்தை பெற்றவர் ஆவார். இவர் தனக்கு பொறுப்பு அளிக்கப்பட்ட கிழக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியை நன்கு நடத்தி உள்ளார். இவருடைய கணவர் மீது உள்ள பொருளாதாரக் குற்றங்களினால் இவர் அரசியலுக்கு வந்தார் என்னும் ஒரு செய்தி இவருக்கு சற்றே பின்னடைவை அளிக்கிறது.
இந்த நால்வரை தவிர ஜெய்ராம் ரமேஷ், அகமது படே, குலாம் நபி ஆசாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.