டெல்லி:
வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த நஜிப் ஜங் தனது பதவியை திடீரென கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா கடிதம் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில வாஜ்பாய் ஆட்சியில் உள்துறை செயலாளராக ருந்த அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது.
1969ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த இவர் வாஜ்பாய் ஆட்சியில் உள்துறை உள்பட பல்வேறு முக்கிய அமைச்சக பொறுப்புகளை வகித்தவர்.
2006ம் ஆண்டு நகர்புற வளர்ச்சி அமைச்சக செயலாளராக இருந்தபோது ஓய்வுபெற்றார். இவர் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 70 வயதாகும் இவரை துணை நிலை ஆளுநராக நியமனம் செய்வதற்கான ஆவணங்கள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.