டெல்லி: கொரோனா சுகாதார முறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 10ம் தேதி உடல்நலக் கோளாறு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த ரத்த உறைவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, பிரணாப்புக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட நேற்று ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று மாலை காலமானார்.

இதையடுத்து, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயாகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா வழிகாட்டுதல் நடைமுறையின் படி அவரது உடல் தகனத்துக்காக வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் டெல்லியில் லோதி மின் மயானத்தில் பின்னர் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முழு ராணுவ மரியாதையுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் எரியூட்டப்பட்டது.