டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது என்று  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையில் அதிக தொற்று பாதிப்புகளையும், அதிக உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் வைத்து உள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.

இந் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது அருவருப்பை தருகிறது. ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தொலைக்காட்சிகள் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா?

நாளிதழ்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றனவா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கின்றனரா? தொடர்ந்து, இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும்.

நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இதுகுறித்து வெளியான வீடியோக்கள், படங்கள் போலியானதா? என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.