டெல்லி: பாஜக முன்னாள் தலைவர்கள் சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி பிரேம்லதா சிங் ஆகியோர்  இன்று டெல்லியில்  காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

ஏற்கனவே சவுத்ரி பிரேந்தர் சிங் மகனும் முன்னாள் பாஜக தலைவருமான பிரிஜேந்திர சிங்  காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், இன்று பிரேந்தர்சிங் தனது மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஹிசார் பாஜக எம்பியும் , முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கின் மகனுமான பிரிஜேந்திர சிங் ,  கடந்த ஞாயிறன்று, பாஜகவில் இருந்து விலகுவதாக  அறிவித்தார். X இல் அவர் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரஜேந்திர சிங்  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வீட்டை அடைந்தார். ஏற்கனபே பாஜக தலைமைமீது அதிருப்தியில் இருந்த அவர், கடந்த  2023 அக்டோபரில் ஜிண்டில் நடந்த பேரணியில், ஜனநாயக்க ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி தொடர்ந்தால், பாஜகவை விட்டு விலகுவேன் என்று  பாரதிய ஜனதா கட்சிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.  ஆனால், அவரது எச்சரிக்கையை மீறி பாஜக கூட்டணி அமைத்தது.

இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது,   “நிர்ப்பந்தமான அரசியல் காரணங்களுக்காக நான் பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.  கட்சியின் தேசிய ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா.  ஆகியோருக்கு ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரது தந்தையும், தாயாரும் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கின் மகனுமான பிரிஜேந்திர சிங், கடந்த 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரேந்தர் சிங், மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது பாஜகவில் இருந்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பிரேந்தர் சிங், சர் சோட்டு ராமின் தாய்வழிப் பேரன் ஆவார், அவர் ஆங்கிலேயர் காலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் எடுத்த முடிவுகளுக்காக விவசாயிகள் மத்தியில் மிகுந்த மரியாதையைப் பெற்றவர். ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இரண்டு முறை மாநில காங்கிரஸை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.