டில்லி
இந்த வருட குடியரசு தின விழாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை
வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் விழா நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள இருந்ததை கொரோனா காரணமாக ரத்து செய்தார். இந்த ஆண்டு விழாவில் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருந்தனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் மேல் உள்ளது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டில்லி குடியரசு தின விழாவில் சும்கார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த வருடம் கொரோனா பரவலால் அது 25000 மாக குறைக்கப்பட்டது இந்த வருடம் சிறப்பு அழைப்பாளர்களாக 1900 மற்றும் 5000 பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுகாதார, முன் களப்பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள், பெரிய பலூன்கள், பாரா கிளைடர்கள், ரிமோட் மூலம் இயங்கும் விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.