சென்னை; தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறைaயாக மார்ச் 14ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாநில பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்றைய தினம் முதல்முறையாக தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது.
இதில், மாநில அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மார்ச் 14-ம் தேதி அன்று தமிழ்நாடு பட்ஜெட் 2025 (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார். அப்போது, “தமிழ்நாடு சட்டசபை விதி 26/1-இன் கீழ், பேரவையின் அடுத்தக் கூட்டத்தினை தலைமை செயலக வளாகத்தின் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் வைத்து மார்ச் 14, 2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணிக்குக் கூட்டி இருப்பதாகவுங்ம, அன்றைய தினம் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று கூறியிருந்தார்.
மேலும், மேலும், பேரவை விதி 193/1-இன் கீழ் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189/1-இன் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினையும் மார்ச் 21, 2025 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்” என்று அப்பாவு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழ்நாட்டின் கடன் பல மடங்கு பெருகி உள்ளதாகவும், பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், வரும் பட்ஜெட்டில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மேலும் பல கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு முதன்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக பல வாக்குறுதிகளை தி.மு.க. அறிவித்திருந்தது. அதில் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பெரும்பான்மையாக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஆளும் கட்சி சார்பில் கூறப்பட்டாலும், மின் கட்டணம் மாதம் தோறும் கணக்கீடு, பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பெரும்பான்மை வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
தி.மு.க அரசின் இறுதியான முழு நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் முடிந்த பிறகு வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 2026-இல் தேர்தல் நடைபெறும் என்பதால், அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.