சென்னை

சென்னையில் 60  வயதை தாண்டியோருக்கு வீட்டுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் நாடெங்கும் கொரோனா பர்வல் அதிகரித்துள்ளது.  இதையொட்டி நாடெங்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளகள், 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளோர் ஆகியோருக்கு நேற்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.   இந்த தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டு 9 மாதம் ஆனவர்களுக்குப் போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 தவணை கொரோனா தடுப்பூசி  செலுத்திக்கொண்டு 9 மாதங்களைக் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் தகுதியான 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், சமுதாய நல மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இந்த மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 1913, 044-2538 4520, 4612  2300 ஆகிய எண்களைத்  தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்தால், அவர்களின் வீடு தேடிச் சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் 60 வயதைக் கடந்த, முதல் அல்லது 2-வது தவணை செலுத்த இருப்பவர்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.