சீதாப்பூர்
உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வேளாண் போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டக் காத்திருந்த உபி விவசாயிகள் மீது ஒரு கார் மோதி இரு விவசாயிகள் மரணம் அடைந்தனர். அதன்பிறகு வெடித்த வன்முறையில் மேலும் சில விவசாயிகள் மரணம் அடைந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தியைக் கைது செய்த காவல்துறையினர் அவரை சீதாப்பூரில் காவலில் வைத்துள்ளனர்.
சுமார் 38 மணி நேரமாகியும் அவர் மீது எவ்வித குற்றம் சாட்டப்படவும் இல்லை என்பதும் வழக்குப் பதியவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் ”இதுவரை என்னைக் காவலில் வைத்திருப்பதற்காக எவ்வித காரணமும் கூறப்படவில்லை. மேலும் எந்த பிரிவின் கீழ் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் என்பது குறித்த விவரமும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்
நேற்று அதிகாலை 4.30 மணிக்குத் தாம் காவல்துறை டி எஸ் பி பியூஷ்குமார் சிங் என்பவரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தாம் ஒரே வாகனத்தில் 4 பேருடன் சென்றதாகவும் தன்னுடன் எந்த ஒரு பாதுகாப்பு வாகனமோ பாதுகாவலர்களோ வரவில்லை எனவும் கூறி உள்ளார். தம்மைக் கைது செய்து 2 பெண் காவலர்கள் மற்றும் 2 ஆண் காவலர்கள் சுமார் 38 மணி நேரத்துக்கும் மேலாக தம்மை சீதாப்பூர் காவல்நிலைய வளாகத்தில் காவலில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.