ஊட்டி

ஊட்டியில் மழை காரணமாக மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

வானிலை ஆய்வு மையம் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டது.  வானம் கடந்த 10 நாட்களாக மேகமூட்டமாகக் காட்சியளித்துச் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகப் பெய்யும் தொடர் மழை காரணமாக மலர் கண்காட்சி நடந்து வரும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால்  யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.