மதுரை:
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.

மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயப் பணிகளுக்காக நேற்று வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் உயர்ந்துள்ளதால், சிம்மக்கல் தரை பாலத்தை உரசிய வாரே தண்ணீர் செல்கிறது. மேலும் இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆற்றுக்குள் இறங்குவது, புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் விதமாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.