டில்லி,
மிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்படுவது மற்றும் கச்சத்தவு அருகில் மீன் பிடிப்பது தொடர்பான  பிரச்சினை நீண்டு கொண்டே செல்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்த மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை பார்க்கும்போது, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் விரும்பாதது போல ஒரு தோற்றத்தையே ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை  இந்தியா-இலங்கை அதிகாரிகள்  இடையே வரும் 31-ந்தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஏற்கனவே பல முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில்,  இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தை டெல்லியில் 31-ந்தேதி நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் சொரூப் கூறியதாவது:-
இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினை குறித்து நவம்பர் 5-ந்தேதி டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அடுத்ததாக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடக்கிறது.
துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 31-ந்தேதி (சனிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ந்தேதி கொழும்பில் இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு முறை இந்தியா – இலங்கை இடையே தமிழக மீனவர்கள் குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் போதெல்லாம் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்…
ஆனால்… முடிவு எட்டப்படாமல் மீண்டும், மீண்டும் பேச்சு வார்த்தை என்று காரணம் காட்டி இரு நாடு அரசுகளும் பிரச்சினையை ஜவ்வாக இழுந்துகொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.