சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்நத் 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், பல மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில மற்றும் மத்தியஅரசு தலையிட்டு, கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  கடந்த நவம்பர் 14ஆம் தேதி நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவர்களின் இயந்திர படகு திடீரென பழுதடைந்து கடலில் நின்று விட்டது. மீனவர்கள் இயந்திரப் படகை பழுது பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த,  இலங்கை கடற்படையினர் , தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி,  14 மீனவர்களையும் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்தும், அவர்களை உடனே மீட்கக்கோரியும் முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதிம் எழுதினார். இதையடுத்து, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 14 மீனவர்களும்  இலங்கை சிறையி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு அழைத்து வர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, அவர்கள் இலங்கையிலிருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம்   இன்று அதிகாலை 4:15 மணிக்கு சென்னை வந்தனர்.

அவர்களை சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக அரசின் சார்பில் வரவேற்றனர். அதோடு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த 14 மீனவர்களில், 10 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 3 மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியையும், ஒரு மீனவர் நாகப்பட்டினம் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.