சென்னை; சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான பிறகே, முதலாண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும், தமிழ் மொழியை மத்தியஅரசு வளர்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்தார்.

நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தயாராகி உள்ள நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ இன்னும் பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவது காலதாமமாகி வருகிறது. இதையடுத்து, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  சென்னை தலைமை செயலகத்தில்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய கல்வி வாரியம்  சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை இந்தளவிற்கு தாமதப்படுத்துவது வருத்தத்திற்குரியது. தேர்வு முடிவு தாமதமாக வருவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றவர், சிபிஎஸ்இ  +2 தேர்வுகள் முடிவுகள் வெளியான பின் தான் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கின்ற, செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும் என்று கூறிய பொன்முடி,  தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டமே உள்ளது. தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் மொழியை மத்தியஅரசு வளர்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்தார்.