கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 2 பெண்கள் முதன்முறையாக  வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை. இந்த நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, நாகலாந்து வரலாற்றில்,  முதல் முறையாக ஹெக்கானி ஜக்காலு  மற்றும் சல்ஹுட்டோனு குர்ஸே ஆகிய 2 பெண்கள் எம்எல்ஏக்களாக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

60தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இன்று (மார்ச் 2ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடெபற்றது. முன்னதாக,  ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. தற்போதைய பாஜக எம்எல்ஏ கசிட்டோ கினிமி அகுலுட்டோ போட்டியின்றி தேர்வானர்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இங்குள்ள திமாபூர் தொகுதியில் என்டிபிபி கட்சி சார்பில்  போட்டியிட்ட ஹெக்கானி ஜக்காலு என்ற பெண் வேட்பாளர்,  எல்ஜேபி வேட்பாளர் ஹீடோ ஹீமோமயை எதிர்த்து போட்டியிட்டார். இந்த நிலையில், ஹெக்கானி ஜக்காலு 1536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

60ஆண்டுகால நாகலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏவாக வெற்றிபெற்ற ஹெக்கானி ஜக்காலு அம்மைநில பல்கலையில் படித்து அங்கு பணியாற்றி வருகிறார். 48 வயது நிரம்பிய ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக யூத் நெட் என்ற அறக்கட்டளையை தொடங்கி இளைஞர்களுக்கான கல்வி தொடர்பான பல உதவிகளை செய்து வருகிறார். இவர் குடியரசு தலைவரிடம் இருந்து நாரி சக்தி புரஷ்கார் விருது பெற்றவர்.

அதுபோல  நாகாலாந்தின் அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியை சேர்ந்த சல்ஹுட்டோனு குர்ஸே என்ற பெண் ஓட்டல் அதிபரும்  வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து இதுவரை எந்தவொரு பெண்களும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறாத நிலையில், இந்த முறை, முதன்முறையாக 2பெண்கள் எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே வேளையில், நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 1977ம் ஆண்டு எம் ஷாய்ஸா என்ற பெண் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2022ம் ஆண்டு பாங்நான் கோன்யாக் என்ற பெண் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.