ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக தீயணைப்பு படை வீரர் திலீப்குமாரால் ஆராயப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க 2 மீட்டர் தொலைவில், 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்க அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், இதற்காக பிரத்யேகமாக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் 45 அடிக்கு மேல் ரிக் இயந்திரத்தால் துளையிட முடியாத காரணத்தால், போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிந்து தற்போது வரை மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டது.

தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக 55 அடிக்கு கீழ் உள்ள பாறையின் தன்மை குறித்தும், மீட்பு பணியின் போது சுலபமாக மீட்க தேவையான இட வசதி குறித்தும் ஆராய தீயணைப்பு வீரர் திலீப்குமார் சுரங்கத்திற்குள் ஏணி உதவியுடன் இறங்கியுள்ளனர். தொடர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் உள்ளே சென்ற அவர், எவ்வித காயங்கள் இன்றியும் வெளியே வந்தடைந்தார்.

அதேநேரம் திலீப் குமார் உதவியுடன், ஆய்வுக்காக பாறை ஒன்றும் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.