கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஹவுரா கோர்ட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஏராளமான வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போது நீதிபதி அலுவலகத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில்  அம்மாவட்ட முதன்மை  நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் தலைமை நீதிபதி அலுவலகத்தில் உள்ள குளிர்சாத இயந்திரம் வெடித்து சிதறி தீ பிடித்தது.

இதையடுத்து  அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக அலறியடித்து வெளியே ஓடினர். தீ மளமளவென்று அறை முழுவதும் பரவியது.

இந்த பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த வழக்குகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

தகவலறிந்து சுமார் பத்து வாகனங்களில் விரைந்துவந்த  தீயணைப்பு மீட்புப் படையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் ஹவுரா பாலம் வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.