சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

14 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பலகை தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. செயலக கட்டிடத்தைப் போல் 1959 இல் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடம் 177 அடி உயரத்துடன் நாட்டிலேயே மிக உயரமான கட்டிடமாக விளங்கியதுடன் சென்னையின் பிரபலமான அடையாளமாக உள்ளது.

1975 ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய தீ விபத்தில் இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து புனரமைக்கப்பட்டு இந்த கட்டிடம் எல்.ஐ.சி.-யின் சென்னை மண்டல தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.