டில்லி

மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால்  ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த மாதம் 31ம் தேதி ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாளாக அரசு அறிவித்துள்ளது. இதில் தவறும்பட்சத்தில் ₹10ஆயிரம் அபராத தொகையாக வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தவறினால் பான் கார்டு முடக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆதார் மற்றும் பான் எண்களைக் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், வருமான வரி சட்டத்தின் கீழ் அதற்கான பின்விளைவுகளைக் கண்டிப்பாக எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு பான்கார்டு செயலிழந்தால், சட்டப்படி பான் வழங்கப்படவில்லை என்றும், வருமான வரி சட்டத்தின் கீழ் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.   ஆயினும் வங்கிக் கணக்கைத் தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது போன்ற வரியுடன் தொடர்பில்லாத நோக்கங்களுக்காக பான் கார்டை அடையாள சான்றாகப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படாது.

அதே வேளையில் செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கானது வருமான வரியின் கீழ் வரும் பரிவர்த்தனைகளைக் கொண்டிருந்தால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.  குறிப்பாக ₹50ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் அல்லது பணத்தை எடுத்தால் பான் எண் தேவைப்படும்.   ஆதாரை இணைத்தவுடன் செயலிழந்த பான்கார்டு செயல்பாட்டிற்கு வரும்.  ஆகவே புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.