டில்லி

ப்பான் பிரதமர் இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஒப்பந்தம் இட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, 3.5 டிரில்லியன் ஜப்பான் யென் (2.10 லட்சம் கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தார். இந்த முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்பட்டது.  நேற்று ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா, 2 நாள் பயணமாக  இந்தியா வந்தார்.

பிரதமருடன் ஜப்பானிய உயர்நிலை அதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜப்பான் பிரதமரை டில்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.  பிறகு  டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பியுமியோ கிஷிடா நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

சந்திப்பின்போது, இரு நாடுகளின் நல்லுறவு, வர்த்தகம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தி இரு நாடுகள் இடையிலான கலாச்சார, பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.  தவிர, ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் 4,200 கோடி டாலர் (சுமார் ரூ. 3.20 லட்சம் கோடி)  முதலீடு  செய்யப் போவதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.  இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது.  இந்த ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு  அடுத்த 5 ஆண்டுகளில்  மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.