ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிப்பு கிளம்பியது. இதனால் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த சரவணன் தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் வேற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்தார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சரவணன் தனது மகள் இறந்துவிட்டதாக ஊரை சுற்றிலும் இன்று கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தார். அந்த பேனரில் தனது மகள் நேற்று மதியம் இறந்துவிட்டதாகவும் அவளது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யபடுகிறது என வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.