சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வசேகர், இவரது மகன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த செல்வசேகரும் மகனின் பிரிவை தாங்க முடியாமல் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

போட்டோகிராஃபரான செல்வகுமாரின் மகன் ஜெகதீஸ்வரன் தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் டூ தேர்வில் 424 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

மருத்துவப் படிப்பில் சேர்வதை கனவாகக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அரசு ஒதுக்கீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து நீட் தேர்வுக்காக கடந்த இரண்டாண்டுகளாக படித்து வந்த ஜெகதீஸ்வரனுக்கு இந்த ஆண்டும் இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் மகனில் பிரிவை தாங்க முடியாமல் தந்தையும் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.