மும்பை

காராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் வரும் ஜூன் முதல் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் நடை பெற்று வருவது தெரிந்ததே.  மகாராஷ்டிரா விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடி, மின்சாரக் கட்டண நிலுவைத் தொகை தள்ளுபடி,  குறைந்த பட்ச விலை அறிவிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது.   மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை முழு அளவில் பரிசீலனை செய்யவில்லை என அந்த சங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய பிரதேச கிளைத் தலைவர் கேதார் சிரோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் உள்ள விவசாய சகோதரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்.   மகாராஷ்டிராவில் உள்ள அதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடர்கிறது.

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ஆதரவாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகளும் வரும் ஜுன் 1 முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்    அனைவரும் ஒன்று கூடி விவசாயிகளில் குரலை தெரிவிக்க உள்ளோம்.    மகாராஷ்டிராவில் நடைபெறுவது போலவே ஜுன் 1 ஆம் தேதி அன்று இந்த 4 மாநிலங்களிலும் கிராம வேலை நிறுத்தப் போராட்டம் முதல் கட்டமாக நடைபெற உள்ளது”

அடுத்த கட்டமாக விவசாயப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், பால், உணவு தானியங்கள் ஆகியவைகளை விற்பனை செய்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.    விவசாயிகள் அனைவரும் இந்த  போராட்டங்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை தருவதாக ஏற்கனவே வாக்களித்து விட்டனர்.”  எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பாஜக அரசுக்கு இந்த விவசாயிகள் போராட்டம் ஒரு சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.