திருச்சி,

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவின்ர் இன்று திருச்சியில் இருந்து டில்லிக்கு பயணம் மேற்கொண்டனர். டில்லியில் வரும்  21-ந்தேதி நடைபெற இருக்கும்  விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கவும், மீண்டும் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தவும் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அரைநிர்வாண நிலையில்  எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி, மண் சோறு சாப்பிடுதல், சேலை கட்டி போராட்டம், தாலி அறுக்கும் போராட்டம், நிர்வாண போராட்டம் போன்ற பல்வேறு வகையான போராட்டம் நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

ஆனால், தொடர்ந்து 41 நாட்கள் போராட்டம் நடத்தியும் தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை டில்லி அரசு கண்டுகொள்ளவில்லை.

அதையடுத்து தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி டில்லிக்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தை கைவிடும்படியும் இது குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று, மே 25-ந்தேதிக்குள் விவசாயிகளின்  கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்து போராட்டத்தை வாபஸ் பெற்று, விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.

விவசாயிகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் மத்தியஅரசு வெளியிடவில்லை.

இதன் காரணமாக இன்று இன்று அய்யாக்கண்ணு தலைமையில்  விவசாயிகள் குழுவினர் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் முதல்வரை சந்தித்து பேச நினைத்தனர். ஆனால், முதல்வரோ சென்னையில் இருந்து எஸ்கேப்பாகி ஊட்டிக்கு பறந்துவிட்டார்.

அதன் காரணமாக சென்னையில் வேளாண்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்து விட்டு,  ஜி.டி. எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

சனிக்கிழமை டெல்லியை சென்றடையும் தமிழக விவசாயிகள், ஞாயிற்றுக்கிழமை, டில்லியில்  28 மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவது. பாராளுமன்ற கூட்ட தொடரின் போது லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி முற்றுகை போராடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

இதற்காக அனைத்து மாநில விவசாயிகள் சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.