சண்டிகர்: ஹரியானா மாநில முதல்வரின் சொந்த ஊரான ரோடக் மாவட்டம் பனியானி கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு, வேளாண் காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஃபாசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ், அவர்களுக்கு சேர வேண்டிய வேளாண் காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேளாண்மையில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அக்கிராமத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கிலிருந்து, பயிர்க் காப்பீட்டு பிரீமியம் என்ற பெயரில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளோ, தாங்கள் இதுவரை அதுதொடர்பாக எந்தத் தொகையையும் பெறவில்லை என்று கூறுகின்றனர்.

வங்கி அதிகாரிகளும், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும், விவசாயிகளின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் குறைந்தது குறித்து, ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொள்ளும் வேளையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளோ, தங்களின் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் சொந்த கிராமமான பனியானி கிராமத்தில்தான் இந்த நிலை!

– மதுரை மாயாண்டி