டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருவதால் போராட்டம் கைவிடப்படவில்லை. இந் நிலையில், நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பிப்ரவரி 18ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. நடுவழியில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, அவர்களுக்கான உணவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.