புவனேஷ்வர்:

ங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழையும் கொட்டி வருகிறது. இதன் காரணமாக கடற்கரை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சென்னை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தமிழகத்தை தவிர்த்து ஒடிசா நோக்கி தனது முகத்தை திருப்பியது. நேற்று முதல் ஒடிசாவை நோக்கி நகர்ந்த புயல் தற்போது ஒடிசா கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளது. இன்று  பகல்  11 மணியளவில் ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே ‘பானி’ புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.  புயலின் கண் பகுதி என்று சொல்லப்படும் மையப்பகுதி 2 மணியளவில் கரையை தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் புயல் காரணமாக   ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம், விஜயநகரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது.

தற்போது ஒடிசாவிலும் பலத்த மழையுடன் காற்றும் வீசி வருகிறது.‘ ஃபானி’ புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசும். இடைவிடாது மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆந்திரா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஃபானியின் மிரட்டல் வரலாறு காணாத அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,  நள்ளிரவு முதல் புவனேஷ்வரில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா விமான நிலையம்  இன்று இரவு 9.30 மணி முதல் சனிக்கிழமை இரவு 6 மணி வரை மூடப்படுகிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகள் வழியாக செல்லக்கூடியரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது

புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையை ஒடிசா மாநில நேற்று முதல் தீவிரப்படுத்தி வருகிறது. சுமார்  8 லட்சம் பேர் இப்படி வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறின.

இதுபோன்ற தீவிர புயல் கடந்த 1999ம் ஆண்டு ஒடிசாவை தாக்கியதாகவும், அதன்டிபிறகு, தற்போது ஃபானிதான் தீவிர புயலாக உருவாகி ஒடிசாவை மிரட்டி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஏப்ரல் மாதத்தில் புயல் உருவாகியிருப்பது 43 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும்.