சென்னை

பிரபல முன்னணி இயக்குநரான எஸ் பி ஜனநாதன் இன்று காலமானார்.

பிரபல தமிழ் திரையுலக முன்னணி இயக்குநரான எஸ் பி ஜனநாதன் தஞ்சை மாவட்டம் வடசேரியில் பிறந்தவர் ஆவார்.   இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பி லெனின், பரதன், வின்செண்ட் செல்வா, கேயார் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் ஆவார்.

இவருடைய இயக்கத்தில் முதலில் இயற்கை திரைப்பட்ம்க் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.  அதன் பிறகு அவர் ஈ, பேராண்மை, புறம்போக்கும் என்கிற பொதுவுடைமை ஆகிய புரட்சிகர கருத்துக்கள் கொண்ட படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது 61 வயதாகும் இவர் திருமணம் ஆகாதவர்.

இவர் இயக்கி வரும் லாபம் என்னும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.   இந்த படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஜனநாதன் கடந்த 11 ஆம் தேதி அன்று வீட்டுக்கு சாப்பிடச் சென்றுள்ளார்.  நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் வீட்டுக்குச் சென்ற உதவியாளர்கள் அவர் சுயநினைவின்றி உள்ளதைக் கண்டுள்ளனர்.

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வந்தனர்.  சிகிச்சை  பலனின்றி இன்று காலை அவர் ஜனநாதன் உயிர் இழந்தார்.  அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.    பல்வேறு பிரபலங்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.