டெல்லி:
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கடத்திவந்தவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு கடந்த நவம்பர் 8 ம் தேதி ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 8 ம்தேதி பங்களாதேஷ் எல்லை வழியாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமையினர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அஸிசுர் ரஹ்மான் என்பவரிடமிருந்து 40 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அஸிசுர் ரஹ்மானிடம் தீவிரவிசாரணை நடத்திவருவதாக கூறிய தேசிய புலனாய்வுப் பிரிவினர், ஐ எஸ் ஐ தீவிரவாதிகளின் உதவியுடன் பாகிஸ்தானில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பதிப்பித்ததாக தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் நோட்டுகளில் 11 பாதுகாப்பு அம்சங்கள் துல்லியமாக பதிப்பித்துள்ளனர் என்றும் அவர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்.