டெல்லி: போலி பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான், தன்னுடைய மகன் அப்துல்லா அசம்-க்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு அசம்கான் மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில பாஜக சார்பில்,  ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் புகார்  அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதுதொடர்பான வழக்கு  ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசம்கான் முறைகேடு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும், லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990 செப்டம்பர் 30 எனவும் உள்ளது. அசம்கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் இராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தற்போது சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் அசம்கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால், 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பபு வழங்கியது. மேலும், குற்றவாளிகள் 3 பேருக்கு தலா  7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபித் பன்சால்  பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இதை அடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரும், அங்கிருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உ.பி.யில் மறைந்த முலாயம் சிக்கின் சமாஜ்வாதி கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்து வருபவர் அசம் கான். இவர் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவர் மீது ஏற்கனவே (2022-ஆம் ஆண்டு) ஊழல் வழக்கு ஒன்றில் நீதிமன்றம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பின் அடிப்படையில் அசம்கான் தனது சட்டமன்ற பதவியை இழந்தார். அதுபோல அவரது மகனான  அப்துல்லா அசம் மீதான வழக்கில், 2023 பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில்  அவரும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.