மதுரை:

துரை அரசு மருத்துவக்கல்லூரியில் போலி அட்மிஷன் உத்தரவுடன் சேர வந்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிக்கான இடங்கள் கவுன்சிலிங் மூலம் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டது. தமிழகத்திலும் கடந்த மாதமே அனைத்து இடங்களும் நிரம்பி, பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், மதுரை மருத்துவக்கல்லூரிக்கு நேற்று வந்த 2 மாணவர்கள், மருத்துவம் படிப்பதற்கான உத்தரவை எடுத்து வந்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், அந்த 2 மாணவர்களை யும் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், போலியான அட்மிஷன் ஆணையை எடுத்து வந்தவர்களில் ஒருவர்  பன்னுவா ரியாஸ். இவர்  ஆந்திராவை  சேர்ந்தவர் என்பதும் மற்றொருவரான  நிதிவரதன் என்பவர்  பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. விசாரணையில் அவர்களுக்கு போலியான அட்மிஷன் ஆணை, டில்லியில் வழங்கப்பட்டதாகவும், இதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியாக ரூ.16 லட்சம் அளவுக்கு பணம் கொடுத்து ஏமாந்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து   தல்லாகுளம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.