சென்னை

சென்னை புறநகர் வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான கிரீன் டீயை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

மாதிரி புகைப்படம்

சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் காலாவதியான பொருட்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டி விட்டுச் செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது..   இந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் கம்பெனிகளில் சோதனை செய்வதில் சுணக்கம் காட்டி வருவது, இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்த வண்டலூர் – மீஞ்சூர் வெளி வட்ட சாலை, நசரத்பேட்டை அருகே சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் சிலர் காலாவதியான கிரீன் டீத்தூள் பாக்கெட்டுகளை கொட்டி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் டீத்தூள் பாக்கெட்டுகள் அனைத்தும் காலாவதி ஆனது என்று அறியாமல், அதனை அவர்கள் தங்களது பைகளில் போட்டு எடுத்துச் சென்றனர்.

சாலையின் ஓரத்தில் சுமார் 1 டன் எடை கொண்ட டீ தூள் பாக்கெட்டுகள் மொத்தமாகக் கொட்டப்பட்டுள்ளது.  இவை ஆஸ்திரேலியாவில் 2003 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு காலாவதியானதாக அந்த அட்டைப் பெட்டியில் அச்சிடப்பட்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளான டீ தூள் பொட்டலங்களை யார், கொண்டு வந்து கொட்டினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.