திருவனந்தபுரம்

கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, 44 சதவீதத்திற்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது. இதையொட்டி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.  கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கியில், கடந்த ஆண்டுகளில் 70 சதவீதம் நீர் இருந்த நிலையில், தற்போது 32 சதவீதமாக உள்ளது. நீர்மட்டும் 54 அடிக்குக் குறைவாக உள்ள நிலையில், நீர்மட்டம் உயரவில்லை என்றால் மின் உற்பத்திக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

கேரளாவில் அடுத்த 2 மாதங்களுக்கு மழை குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், வறட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேரள மாநில அரசு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.