சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. காலை முதலே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தரத் தொடங்கி உள்ளனர். இதில் சிலர் போலி பாஸ்களுடன் வர முயற்சி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில், தனி நீதிமன்ற தீர்ப்பு நேற்று மாலை வெளியான நிலையில், மேல்முறையீடு வழக்கில், 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், சட்டப்படி, பொதுக்குழுவில் அதிக உறுப்பனிர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தால், அதை விவாதித்து நிறைவேற்றுவதுதான் சட்டப்படி சரியானது. ஆனால், நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இன்றைய அதிமுக பொதுக்குழு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை தந்துள்ளார்.அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் 100% கடைபிடிக்கப்படும் என்றும், தீர்ப்பினால் எந்த பின்னடைவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக அனைவரும் கருதுவதாகவும், அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே இயக்கத்தின் வளர்ச்சிக்காக இரு தலைவர்களிடமும் முறையிட்டுள்ளோம். அவர்கள் எங்களுக்கு நல்ல வழியைக் காட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்  போலி பாஸ்களுடன் சிலர் பொதுக்குழுவில் பங்கேற்க வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவலர்களிடம் அவர்கள் வாங்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்றைய பொதுக்குழுவில் சுமார் 2500 பேர் பங்கேற்க உள்ள நிலையில், சசிகலாவின் ஆதரவாளர்கள் போலி பாஸ்களுடன் வந்து சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பொதுக்குழுவுக்கு வெளியே சலசலப்பு நிலவி வருகிறது.