சென்னை: கொரொனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் , மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.50 லட்சம்  நிதியுதவி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் இணைந்து முதல்வரை நேரில் சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கொரொனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் , மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.