சென்னை: நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றப் பணிகள் மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ,  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. நீதிபதிகள் சங்க கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து வந்தது. இதற்கிடையில்,  நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தார். இந்த மரணம் நீதித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.,

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரியில் மறு உத்தரவு வரும்வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. கைதிகளை சிறையில் அடைப்பதற்கான உத்தரவைத் தவிர்த்து, பிற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் முன் அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்படுகிறது. நீதிபதிகளிடம் முன் அனுமதிப் பெற்ற பிறகே நீதிமன்ற வளாகத்திற்குள் வர வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்காடிகள் அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் தேவையின்றி நீதிமன்ற கட்டடத்துக்குள் நுழைய வேண்டாம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.