சென்னை: புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் பு ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு  உத்தரவிட்டு உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா் சகாய் மீனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் தொடா்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தாலேயே அவா்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது. குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அதனுடைய விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால், அதைக் நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருள்களைப் பெறலாம். கடைகளில் விரல் ரேகை சரிபாா்ப்புக்குப் பிறகு, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்றுப் பயனுறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரை பதினைந்து இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பிலுள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையினைச் சமநிலையில் வைக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இடையில் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 27,577 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,509 புதிய குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களிடம் சேருவதற்கு முன்னரே அட்டைதாரர்கள் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளில் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் செயலாக்கம் செய்யப்பட்டு அந்த விவரம் குடும்ப அட்டை எண்ணுடன் அட்டைதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை எண்ணைக் கடைப் பணியாளரிடம் தெரிவித்து விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பின்னர் நியாயவிலைக் கடையில் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.