சென்னை: அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் அருகே 1 ஏக்கர் நிலத்தின் விற்பனை தொகையை மாற்றியதை எதிர்த்து ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நீதிபதி சுப்ரமணி வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் தமது உத்தரவில் கூறி உள்ளதாவது: அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதால் அரசின் கொள்கை, நலத்திட்டம் மக்களை சென்றடைகிறதா என சந்தேகம் உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் அடித்தட்டு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சென்றடையவில்லை. எனவே அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தி உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அந்த அலுவலகத்தின் பணி, ஒவ்வொரு சேவைக்கும் எத்தனை நாள்கள் ஆகும் என்பது பற்றிய அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தொடர்பான புகார் எண், முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும் என்று கூறி உள்ளார்.